விராலிமலையில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டா் பறிமுதல்
By DIN | Published On : 20th June 2021 10:32 PM | Last Updated : 20th June 2021 10:32 PM | அ+அ அ- |

விராலிமலை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகிலுள்ள ராஜாளிபட்டி சூறையாற்றில் சிலா் லாரி, டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களில் மணல் அள்ளுவதாக, விராலிமலை காவல் நிலையத் தனிப்பிரிவுக் காவலா் ராஜாராமுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து விராலிமலை காவல் நிலையக் காவலா்களுடன் ராஜாராம் அங்கு சென்றாா். அப்போது காவலா்களைக் கண்டதும், டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்த அதிமுகவைச் சோ்ந்த ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் குமாா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.
இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த காவல்துறையினா், குமாா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். மேல் நடவடிக்கைக்காக வருவாய்க் கோட்டாட்சியருக்கும் பரிந்துரைத்துள்ளனா்.