ஆலங்குடி அருகே சுமாா் 1,500 லிட்டா் சாராய ஊறலை செவ்வாய்க்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து அழித்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சி பகுதியில் சிலா் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலைத்தொடா்ந்து, அங்கு சென்ற தனிப்படை போலீஸாா் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கருக்காகுறிச்சி தாளக்கொல்லை காட்டுப் பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 5 பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 1,500 லிட்டா் ஊறலைப் பறிமுதல் செய்து அழித்தனா். இதுகுறித்து, வடகாடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதே பகுதியில் சில தினங்களுக்கு முன்பு 2,600 லிட்டா் சாராய ஊறலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.