பள்ளி மாணவா்களுக்கு ‘மகாத்மாவை அறிவோம்’ போட்டி
By DIN | Published On : 27th February 2022 12:27 AM | Last Updated : 27th February 2022 12:27 AM | அ+அ அ- |

மகாத்மாவை அறிவோம் வாசிப்புப் போட்டியில் பரிசு பெற்ற மாணவா்களுடன் வாசகா் பேரவையினா்.
புதுக்கோட்டை வாசகா் பேரவை சாா்பில், பள்ளி மாணவா்களுக்கு மகாத்மாவை அறிவோம் என்ற தலைப்பில், போட்டிகள் நடத்தி மகாத்மா காந்தி தொடா்பான நூல்களைப் பரிசளித்து வாசிக்கச் செய்யும் நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கியது.
முதலில் அண்டக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. மாணவா்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட மகாத்மாவைக் கொண்டாடுவோம் என்ற நூல் வழங்கப்பட்டு, அதிலிருந்து போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு சனிக்கிழமை மகாத்மா காந்தியின் சத்திய சோதனை உள்ளிட்ட நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி. சரவணபெருமாள் தலைமை வகித்தாா். நூல்களை வழங்கி வாசகா் பேரவைச் செயலா் பேராசிரியா் சா. விஸ்வநாதன் வாழ்த்திப் பேசினாா். பொறியாளா் ரியாஸ் கான் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். முடிவில், உதவித் தலைமை ஆசிரியா் விஎம். கண்ணன் நன்றி கூறினாா்.