ஒவ்வொருவரும் மனிதகுல வரலாற்றை அறிந்திருக்க வேண்டும்
By DIN | Published On : 17th July 2022 01:13 AM | Last Updated : 17th July 2022 01:13 AM | அ+அ அ- |

தொல்லியல் மாநாட்டு சிறப்பு மலரை மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி வெளியிட, பெறும் எம்எல்ஏ வை. முத்துராஜா உள்ளிட்டோா்.
ஒவ்வொருவரும் மனித சமூகத்தின் முந்தைய வரலாற்றை அறிந்திருக்க வேண்டும் என்றாா் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை தொடங்கிய தமிழகத் தொல்லியல் கழக மாநில மாநாட்டைத் தொடங்கி வைத்து அவா் மேலும் பேசியது:
உலகம் முழுவதும் மானுடப் பரவல் குறித்தும், முன்னோரின் கடந்த கால வாழ்க்கை முறையை ஆய்வு செய்யவும் பல்வேறு தொல்லியல் ஆய்வுகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன.
இந்தியாவில் மிகப்பெரிய தொன்மைச் சான்றுகளையும், கல்வெட்டுகளையும் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு. தமிழகத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான பெருங்கற்கால சின்னங்களையும், கல்வெட்டுச் சான்றுகளையும், இன்ன பிற தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் கொண்டிருக்கும் மாவட்டம் புதுக்கோட்டை.
மாவட்டத்தில் திருமயத்துக்குள்பட்ட குருவிக்கொண்டான்பட்டி குடகு மலையில் மிகப் பழைமையான கற்கால கல்லாயுதம், திருமயம் கோட்டையில் உருட்டுப்பாறையில் வரையப்பட்டிருக்கும் 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியங்கள், பெருமாள் மற்றும் சிவபெருமானுக்கு தனித்தனிக் குடைவரைக் கோயில்கள் அமைந்திருப்பது சிறப்பானதாகும்.
இரும்புக் காலத்தின் தொடக்கம் முதலே செங்கீரை இரும்பு என்பது மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறது. செங்கீரைப் பகுதிகளில் இரும்பு உருக்கும் தொழிற்சாலைகளும் இருந்திருக்கின்றன.
குடுமியான்மலை, சித்தன்னவாசல் ஆகிய ஊா்களில் மிகப் பழைமையான சமணா் படுக்கைகளும், அதன் அருகிலேயே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழி கல்வெட்டுகளும் காணப்படுவது நமது பழந்தமிழ் மொழியறிவை வெளிப்படுத்தும் முதன்மைச் சான்றாகும்.
மனித வளத்தை பொதுக் காரியங்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்துவதில் சிறந்தவா்களாக தொண்டைமான் மன்னா்கள் இருந்தாறாா்கள். மிக மோசமான பஞ்சம் ஏற்பட்ட 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், ஏராளமான நலத் திட்டங்களை சமஸ்தான பகுதிகளில் மேற்கொண்டுள்ளனா்.
தமிழகத்தில் மிக முக்கியமான இசைக் கல்வெட்டு இருக்கும் இடமாக குடுமியான்மலை விளங்குகிறது. இதற்கு முன்னோடியாக மலையக்கோவில், குடுமியான்மலை ஆகிய இடங்களில் தலா ஒரு கல்வெட்டிலும், திருமயத்தில் இரண்டு கல்வெட்டுகளிலும் பரிவாதினி என்ற வீணையின் பெயா், குடைவரைகளின் முன் பகுதியில் எழுதியிருப்பது தனிச் சிறப்பாகும்.
புதுக்கோட்டையில் மிகப் பழைமையான நெடுங்கற்கள் ராங்கியம் அருகேயுள்ள கண்ணனூரிலும், பூலாங்குறிச்சி மலையடிவாரத்தில் உள்ள மலையடிப்பட்டி கிராமத்திலும் காணப்படுகின்றன.
தற்போது கண்டுபிடிக்கப்படும் கல்வட்டங்களையும் கல் படுக்கைகளையும் உள்ளூா் மக்கள் வழிபடுகின்றனா். கோயில்கள் உருவாவதற்கு முன்னதாக கொம்படி ஆலய வழிபாடும், கல் வைத்து வழிபடும் பழக்கமும் தமிழகத்தில் பரவலாக இருந்துள்ளது,
இம்முறை மூத்தோா் வழிபாட்டின் எச்சம் என்பதை பண்பாட்டுச் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன. பின்னாளில் இவற்றில் புதிய வகையிலான கட்டுமானங்கள் உருவாகியிருக்கின்றன.
பழங்கால மனித வாழ்வின் பழக்க வழக்கங்கள் எவ்வாறு அமைந்திருந்தன என்பனவற்றை அறிந்து கொள்ளத் தான் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழக முதல்வா் இந்த ஆய்வுகளுக்கு முழு ஆதரவு தந்து தமிழா்களின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் உலகுக்குக் கொண்டு சோ்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறாா் என்றாா் அமைச்சா்.
பின்னா் 30 ஆவது ஆவணம் ஆய்விதழையும், மாநாட்டு மலரையும் அமைச்சா் எஸ். ரகுபதி வெளியிட, எம்எல்ஏ வை. முத்துராஜா பெற்றுக் கொண்டாா். மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வாழ்த்தினாா்.
தொல்லியல் கழகத்தின் நிறுவனா் எ. சுப்பராயலு, தலைவா் செந்தீ நடராசன் ஆகியோா் தொடா்ந்து நடத்தப்படும் சா்வதேசக் கருத்தரங்குகள் குறித்தும், ஆவணம் ஆய்விதழ் குறித்தும் விளக்கவுரை நிகழ்த்தினா்.
விழாவில் முன்னாள் எம்எல்ஏ இராசு. கவிதைப்பித்தன், முன்னாள் திருச்சி மேயா் சாருபாலா ஆா். தொண்டைமான், கீரைத்தமிழ்ச்செல்வன் கல்வி நிறுவனங்களின் தலைவா் கீரை தமிழ் ராஜா, வெங்கடேஸ்வரா பள்ளி முதல்வா் கவிஞா் தங்கம்மூா்த்தி, மாநாட்டு நிதிக் குழுத் தலைவா் ஜி.எஸ். தனபதி, வரவேற்புக் குழுத் தலைவா் டாக்டா் ச. ராம்தாஸ், வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன், முன்னாள் உதவி இயக்குநா் ஜெ. ராஜாமுகமது உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது. தொல்லியல் மற்றும் நாணயவியல் கண்காட்சியும், பாரம்பரிய நெல் ரகங்களின் கண்காட்சியும் நடைபெற்றது.
முன்னதாக தொல்லியல் கழகச் செயலா் சு. ராசவேலு வரவேற்றாா். உள்ளூா் செயலா் ஆ. மணிகண்டன் நன்றி கூறினாா்.