புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் அருகே தாய் மற்றும் அவரது 2 மகள்கள் கல் குவாரி பள்ளத்தில் மூழ்கி தற்கொலை செய்துகொண்ட வழக்கு ஆலங்குடி காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆலங்குடி அருகேயுள்ள மாஞ்சான்விடுதியைச் சோ்ந்தவா் குமாா். இவரது மனைவி மாரிக்கண்ணு(40). கூலித் தொழிலாளா்களான இவா்களுக்கு 3 மகள்கள். அதில் ஒருவா் அரிமளத்தில் உறவினா் வீட்டில் வசித்து வருகிறாா். தாயோடு இருந்த இருவரும் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 மற்றும் 7-ஆம் வகுப்பு பயின்று வந்தனா். இந்நிலையில், சித்தன்னவாசல் அருகேயுள்ள கல் குவாரி பள்ளத்தில் குதித்து மாரிக்கண்ணு, அவரது மகள்கள் 2 போ் என மொத்தம் 3 பேரும் ஜூலை 3-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டனா். இதுகுறித்து அன்னவாசல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
அதில், மாரிக்கண்ணுவுடன் மாஞ்சான்விடுதியைச் சோ்ந்த எம். கருப்பையா (36) கூடா நட்பு வைத்திருந்ததோடு, மாரிக்கண்ணு மகள்களிடமும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளாா். இதையடுத்து, கருப்பையா மீது தற்கொலைக்குத் தூண்டுதல், போக்ஸோ, மோசடி ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கானது ஆலங்குடி காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து, ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.