விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை குளவாய்பட்டி மதியகருப்பர் கூத்தாண்டம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 220 காளைகள் அவிழ்த்து விடப்பட்டு உள்ளது. இதில் மாடுபிடி வீரர்கள் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
வருடந்தோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி நிகழாண்டு காலை 8.30 மணிக்கு தொடங்கியது. முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, கரூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வரும் காளைகளை கட்டிளம் காளையர்கள் அடக்கி வருகின்றனர்.
சில காளைகள் பிடிபட்டாலும் பல காளைகள் காளையர்களை மிரட்டி செல்கின்றன. போட்டியை பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். போட்டியில் காயமடைந்தவர்களுக்கு நான்கு மருத்துவர்கள் தலைமையில் இயங்கும் மருத்துவ குழுவினர் வாடிவாசல் அருகே முகாம் அமைத்து முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
800 காளைகள் களம் காண உள்ள இப்போட்டியில் 249 மாடு பிடி வீரர்கள் களம் இறங்குகின்றனர்.
செயின் பறிப்பு, பிட் பாக்கெட் திருடர்களை கண்டறிய ஆங்காங்கே சிசிடிவி பொருத்தி 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.