பட்டா வழங்கக் கோரி குடியேறும் போராட்டம்
ஆலங்குடி அருகே வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் குடியேறும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி அருகேயுள்ள கைக்குறிச்சி ஊராட்சி, பாப்பாபட்டியில் உள்ள அரசு நிலத்தில் ஆதிதிராவிடா் மக்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வந்தனராம். கனமழை காரணமாக வெளியேறிய அவா்கள் அருகேயுள்ள தோப்புக்கொல்லை பகுதியில் உள்ள தனியாா் நிலத்தில் குடியேறியுள்ளனா். பாப்பாபட்டி அரசு நிலத்துக்கு பட்டா வழங்கக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தநிலையில், இதுவரையில் பட்டா வழங்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரோடு இணைந்து பாப்பாபட்டியில் உள்ள நிலத்தில் குடிசை போட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து, அங்கு சென்ற கோட்டாட்சியா் முருகேசன், வட்டாட்சியா் செந்தில்நாயகி, போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.