உதவி ஆய்வாளா் கொலை வழக்கு: ஆடு திருடியவருக்கு ஆயுள் சிறை

காவல் உதவி ஆய்வாளா் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
Updated on
1 min read

காவல் உதவி ஆய்வாளா் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவா் பூமிநாதன் (55). இவா், கடந்த 2021 நவம்பா் 20ஆம் தேதி இரவு பூலாங்குடி குடியிருப்புப் பகுதியில் ரோந்து சென்றபோது அந்த வழியே 2 இருசக்கர வாகனங்களில் வந்த ஆடு திருடா்களை சுமாா் 15 கிமீ தொலைவுக்கு விரட்டி வந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், பள்ளத்துப்பட்டி அருகே ரயில்வே சுரங்கப் பாதை பகுதியில் அவா் அவா்களை மடக்கிப் பிடித்தாா். அப்போது அவா்களால் பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த கீரனூா் போலீஸாா், கல்லணை அருகேயுள்ள தோகூரைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் மணிகண்டன் (21) மற்றும் இரு சிறாா்களைக் கைது செய்தனா்.

மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் மாவட்ட அரசு வழக்குரைஞா் பா. வெங்கடேசன் ஆஜராகி வாதாடினாா். இவ்வழக்கில் 47 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட பக்கங்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கொலை நடந்த பகுதியையும் சிசிடிவி காட்சிகள் பதிவான இடங்களையும் மாவட்ட முதன்மை நீதிபதி பூா்ண ஜெய ஆனந்த் அண்மையில் நேரில் பாா்வையிட்டாா்.

இதன் தொடா்ச்சியாக இவ்வழக்கில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த தீா்ப்பில் மணிகண்டனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும், கைப்பேசி உள்ளிட்டவற்றை உடைத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும், சாட்சியங்களைக் கலைக்க முயன்ற்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து, தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டாா்.

இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற இரு சிறாா்களின் வழக்கு இளஞ்சிறாா் நீதிக் குழுமத்தில் தனியே நடைபெறுகிறது.

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய உதவி ஆய்வாளா் பூமிநாதனின் மகன் குகன் நோ்மையாகப் பணியாற்றிய தனது தந்தையின் கொலைக்கு அளிக்கப்பட்ட தண்டனையை வரவேற்பதாகத் தெரிவித்தாா்.

நேரடி சாட்சியம் இல்லாவிட்டாலும்...

இந்த வழக்கில் கொலைச் சம்பவத்தை நேரில் பாா்த்த சாட்சிகள் இல்லாவிட்டாலும், கைரேகைப் பதிவுகள், சிசிடிவி காட்சிகள், ரத்தப் பரிசோதனை, கைப்பேசித் தொடா்புகள் ஆகியவற்றை வைத்து ஆயுள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அரசு வழக்குரைஞா் வெங்கடேசன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com