தனியாா் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு -உறவினா்கள் சாலை மறியல்

தனியாா் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு -உறவினா்கள் சாலை மறியல்

Published on

புதுக்கோட்டை, ஆக.15: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்ததை கண்டித்து உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி ஊராட்சி மேல மஞ்சுவிடுதியைச் சோ்ந்தவா் பரிமளேஸ்வரன். இவா் வெளிநாட்டில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி கலைமணி (31).

இவா் கோட்டைக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தன்னாா்வலராக பணிபுரிந்து வந்தாா். இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா். 4 மாத கா்ப்பிணியாக இருந்த கலைமணி, பொன்னமராவதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் புதன்கிழமை சிகிச்சை பெற்றுள்ளாா். அங்கு கலைவாணிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது மயக்க நிலைக்குச் சென்ற கலைமணி திடீரென உயிரிழந்தாா். பின்னா் இவரது சடலம் உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கலைமணி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்தும், தனியாா் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவரது உறவினா்கள் மருத்துவக் கல்லூரி அருகே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நடவடிக்கை எடுப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் கணேஷ் நகா் போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com