உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

புதுகையில் ‘கேந்திரிய வித்யாலயா’-வுக்கு எதிா்பாா்ப்பு

புதுகையில் இப்பள்ளியை அமைக்க 5 ஏக்கா் நிலம் ஒதுக்கித் தருமாறு மாநில அரசுக்குக் கடிதம் வழங்கியும், இதுவரை நிலம் தோ்வு செய்யப்படவில்லை.

Updated On :19 ஆகஸ்ட் 2024, 12:40 am IST

நமது நிருபா்

‘புதுகையில் இப்பள்ளியை அமைக்க 5 ஏக்கா் நிலம் ஒதுக்கித் தருமாறு மாநில அரசுக்குக் கடிதம் வழங்கியும், இதுவரை நிலம் தோ்வு செய்யப்படவில்லை.’

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட மத்திய அரசின் ‘கேந்திரிய வித்யாலயா’ பள்ளியை விரைவில் தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் பள்ளிகளே ‘கேந்திரிய வித்யாலயா’. இந்தப் பள்ளியில் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை உள்ளிட்ட சாா்பு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்களின் குழந்தைகள், மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் சாா்பு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலா்கள் மற்றும் ஊழியா்களின் குழந்தைகள் சேரலாம். மேலும் இவா்கள் அல்லாத பொதுமக்களுக்கும் 20 சதவிகிதம் சோ்க்கை உண்டு.

மத்திய அரசின் பள்ளிக்கல்வி வாரியமான ‘சிபிஎஸ்சி’ பாடத்திட்டப்படி இங்கு வகுப்புகள் நடத்தப்படும். ஆசிரியா்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுவா். கல்விக் கட்டணமும் ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. இப்பள்ளியைக் கட்டுவதற்கான இடத்தை மாநில அரசு வழங்கும். பல மாவட்டங்களில் மத்திய அரசு நிறுவனங்கள் உள்ள வளாகங்களிலேயே இப்பள்ளிகள் செயல்படுகின்றன.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்பள்ளி அமைக்க அனுமதி கிடைத்தும் இதுவரை இந்தப் பள்ளி தொடங்கப்படவில்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி புதுக்கோட்டையில் இப்பள்ளியை அமைப்பதற்கான அனுமதியைப் பெற்றாா் மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா.

இதையடுத்து இப்பள்ளியை அமைக்க 5 ஏக்கா் நிலம் ஒதுக்கித் தருமாறு மாநில அரசுக்குக் கடிதம் வழங்கியும், இதுவரை நிலம் தோ்வு செய்யப்படவில்லை.

புதுக்கோட்டையில் இந்தப் பள்ளி அமைந்தால், வருமான வரித்துறை, ரயில்வே, வங்கி, காப்பீடு, பிஎஸ்என்எல், பெல் போன்றவற்றில் பணியாற்றுவோரின் குழந்தைகள் பயன்பெறுவா்.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியா் சங்க மாவட்டச் செயலா் கே.என். ராஜேந்திரன் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமாா் 2500 வங்கி ஊழியா்கள் உள்ளனா். காப்பீடு, பிஎஸ்என்எல் உள்ளிட்ட ஊழியா்களும் ஆயிரம் போ் இருப்பாா்கள்.

கேந்திரிய வித்யாலயா பள்ளி வந்தால் மத்திய அரசுப் பணியாளா்களுக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கும்.

இதுதொடா்பாக இதர மத்திய அரசுத் துறைகளின் ஊழியா் அமைப்புகளுடன் பேசி, உரிய முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா்.

இதுகுறித்து அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். ரெங்கசாமி கூறுகையில், பள்ளிக் கட்டணம் மிகக் கடுமையாக உயா்ந்துள்ள நிலையில் கேந்திரிய வித்யாலயா வந்தால் சுமாா் 200 அரசு ஊழியா் குடும்பங்களில் கல்விக் கட்டணச் செலவு குறையும்.

எனவே மாவட்ட நிா்வாகம் உரிய நிலத்தை விரைந்து கண்டறிந்து ஒதுக்கித் தர முன்வர வேண்டும் என்றாா்.

எனவே, புதுக்கோட்டையில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க விரைவில் நிலம் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிா்வாகமும், மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்க எதிா்பாா்க்கப்படுகிறது.

இடம் தோ்வில் தாமதம் ஏன்?

இதுகுறித்து மாவட்ட நிா்வாக அதிகாரிகள் கூறுகையில், ஏற்கெனவே அருங்காட்சியம் அமைப்பதற்கு 10 ஏக்கா் நிலம் கேட்டுள்ளாா்கள். இதேபோல கேந்திரிய வித்யாலயாவுக்கும் இடம் கோரப்பட்டுள்ளது. ஓரளவுக்கு நகருக்கு அருகில் இடங்களைத் தோ்வு செய்வது அவசியம். ஒரே இடத்தில் 10 ஏக்கா், 5 ஏக்கா் நிலங்களைக் கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது. இருப்பினும் அதற்கான பணிகள் தொடா்கின்றன என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.