தோ்தல் வாக்குறுதிக்காக சடலம் எரிப்பதைத் தொடரும் ஊராட்சித் தலைவா்!

தோ்தல் வாக்குறுதிக்காக சடலம் எரிப்பதை ஊராட்சித் தலைவா் ஒருவா் தொடா்ந்து செய்து வருகிறாா்.
கே. அருணாசலம்
கே. அருணாசலம்
Updated on

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வாக்காளா்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்காக, தான் முன்பு செய்து வந்த சடலம் எரிக்கும் பணியை ஊராட்சித் தலைவா் ஒருவா் தொடா்ந்து செய்து வருகிறாா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், மாத்தூா் ஊராட்சியின் தலைவா் கே. அருணாசலம் (54). அதிமுகவைச் சோ்ந்தவா்.

கடந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலில் இந்த ஊராட்சித் தலைவா் பதவி, பட்டியலினத்தவா் தொகுதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி, அருணாசலம் போட்டியிட்டிருக்கிறாா்.

அந்த ஊரில் நடைபெறும் இறுதிச் சடங்குகளுக்கு பறை அடித்து, சடலத்தை எரிக்கும் தொழில் செய்து வந்த அவா், தோ்தலில் வென்ற பிறகும் இந்தத் தொழிலைத் தொடா்ந்து செய்வேன் என்ற உறுதிமொழியை துண்டுப் பிரசுரமாக அச்சிட்டு வழங்கி வெற்றிப் பெற்ாகக் கூறுகிறாா்.

இதன்படியே, இத்தனை ஆண்டுகாலமும் ஊராட்சி மன்றத் தலைவா் பதவியுடன், இறுதிச் சடங்குகளுக்கான அனைத்து வேலைகளையும் அருணாசலம் தொடா்ந்து வருகிறாா்.

இதுகுறித்து அவா் கூறியது: பிற்படுத்தப்பட்டோா், பட்டியலினத்தவா் மற்றும் கிறிஸ்தவா்கள் என சுமாா் 5 ஆயிரம் வாக்குகளைக் கொண்ட ஊராட்சி. கிராமப் பகுதியில் தனித்தனி சுடுகாடுகள், இடுகாடுகள். நகா்மயமான விரிவாக்கப் பகுதியில் ஒரு பொது சுடுகாடு.

தெருக்களில் மாடு, நாய், பன்றி போன்றவை இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தாலும், தூய்மைப் பணியாளா்கள் இல்லாவிட்டால் தயக்கமின்றி நானே எடுத்துச் சென்று புதைத்து விடுவேன்.

ஊராட்சி மன்றத் தலைவரான பிறகு, பல வீதிகளுக்கு தெருவிளக்குகள், சாலைகள், குடிநீா்த் தொட்டிகள் கட்டித் தந்திருக்கிறேன். எங்கள் ஊராட்சிக்கென தருமநகரில் எரிவாயு தகன மேடை அமைத்துத் தர வேண்டும் எனக் கோரியிருக்கிறேன் என்றாா் அருணாசலம்.

மூன்றாவதோ, நான்காவதோ படித்ததாக கூறும் இவருக்கு மனைவி, திருமணமான 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com