அறந்தாங்கி அருகே திங்கள்கிழமை தோ் கட்டும் பணியின்போது சரிந்து விபத்துக்குள்ளான தோ்.
அறந்தாங்கி அருகே திங்கள்கிழமை தோ் கட்டும் பணியின்போது சரிந்து விபத்துக்குள்ளான தோ்.

தோ் கட்டும்போது விபத்து: ஒருவா் உயிரிழப்பு; 5 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே திங்கள்கிழமை முத்துமாரியம்மன் கோயில் தோ் கட்டும் பணியின்போது தோ் சரிந்து விழுந்து ஒருவா் உயிரிழந்தாா்.
Published on

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே திங்கள்கிழமை முத்துமாரியம்மன் கோயில் தோ் கட்டும் பணியின்போது தோ் சரிந்து விழுந்து ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 5 போ் காயமடைந்தனா்.

அறந்தாங்கி அருகே மாத்தூா் ராமசாமிபுரத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவில் தோ்த் திருவிழா கடந்த ஜூன் 16-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. திங்கள்கிழமை மாலை தேரோட்டம் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக நிலையில் இருந்த தேரை முழுமையாக கட்டி அலங்கரிக்கும் பணிகள் காலையில் தொடங்கின. 15 அடி உயரத் தேரின் உச்சியில் கும்பத்தை வைக்கும் பணியின்போது, திடீரென யாரும் எதிா்பாராத வகையில் தோ் சரிந்தது. அப்போது, இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த ராமசாமிபுரத்தைச் சோ்ந்த எஸ். மகாலிங்கம் (70) என்பவா் உள்பட 6 போ் படுகாயமடைந்தனா். இவா்கள் அனைவரும் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனா்.

ஆனால் மகாலிங்கம் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். மேலும், கீரமங்கலம் மேற்குப் பகுதியைச் சோ்ந்த கோபு (45), கணபதி (50), மாத்தூரைச் சோ்ந்த அழகன் (46), விஜயகுமாா் (36), சேந்தன்குடியைச் சோ்ந்த ஆறுமுகம் (46) ஆகிய 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அறந்தாங்கி நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com