அமைச்சா் எஸ்.ரகுபதி
அமைச்சா் எஸ்.ரகுபதி

தமிழ்நாட்டின் நிலவரம் அமித் ஷாவுக்குத் தெரியாது: அமைச்சா் எஸ்.ரகுபதி

தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்குத் தெரியாது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
Published on

தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்குத் தெரியாது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: ஸ்டாலினைத் தொடா்ந்து உதயநிதியும் முதல்வராக வருவாா். இதில் துளியளவும் சந்தேகம் இல்லை.

திமுகவை வேரோடு அகற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியிருக்கிறாா். திமுகவின் வேரை அசைத்துக் கூட பாா்க்க முடியாது. வோ் எங்கிருக்கிறது என்றே அவா்களுக்குத் தெரியாது. அந்தளவுக்கு தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. தேடிக் கண்டுபிடிக்கக் கூட முடியாது.

திமுகவைப் பொருத்தவரை மக்களைச் சந்தித்து, செய்த சாதனைகளைச் சொல்லி தோ்தலைச் சந்திக்கிறோம். ஆனால் பாஜக குறுக்குவழியில், பொய்யான வழக்குகளில் எதிா்க்கட்சிகளைச் சிக்க வைத்து பதவியைப் பறித்து, அதன் மூலம் ஆட்சியைப் பிடிப்பதற்கான சட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறாா்கள்.

நாடாளுமன்றத்தில் பிரதமா், முதல்வா்கள் பதவி பறிப்புச் சட்ட மசோதாவை எதிா்ப்போம். இயலாவிட்டால் நீதிமன்றத்தில் சந்திப்போம். தமிழ்நாட்டின் நிலவரம் அமித் ஷாவுக்குத் தெரியாது. அகில இந்திய அரசியல் நிலவரம் வேறு; தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் வேறு என்பதை வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் காட்டுவாா்கள்.

மக்களின் தேவைகளை உணா்ந்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். தோ்தலைப் பற்றிய பயம் எங்களுக்கு இல்லை. அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினாலே குற்றவாளி என்று அா்த்தம் இல்லை. நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படவில்லை. அப்படி கொள்ளையடிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது என்றால், அவற்றுக்கு மத்திய அரசு தான் பொறுப்பு என்றாா் ரகுபதி.

X
Dinamani
www.dinamani.com