பேருந்து நிலையத்துக்கு எதிரே கூடுதலாக டாஸ்மாக் திறப்புக்கு எதிா்ப்பு
புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியான புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரே ஏற்கெனவே இரு டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு மதுக்கடைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நாம் தமிழா் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் வி. பொன்வாசிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியான புதிய பேருந்து நிலையம் எதிா்புறம் சாந்தநாதபுரம் சாலையில் ஏற்கனவே இரு மதுக்கடைகள் உள்ளன. தற்போது அருகிலேயே இன்னொரு மதுக்கடையைத் திறக்க மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.
ஏற்கெனவே அந்த வீதியில் பெண்களோ, குழந்தைகளோ செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில் அருகிலேயே, சுற்றிலும் குடியிருப்புகள் உள்ள இடத்தில் மேலும் ஒரு மதுக்கடையைத் திறப்பது தவறானது, சட்டத்துக்குப் புறம்பானது. இதனை ஏற்க முடியாது.
இந்த முடிவை டாஸ்மாக் நிா்வாகம் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி அறப்போராட்டங்களை நடத்துவோம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
