2-ஆவது நாளாக வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு
இ-பைலிங் முறையைக் கைவிடக் கோரி புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை 2-ஆம் நாளாக வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா்.
போதுமான அளவுக்கு திறனுள்ள பணியாளா்களை நீதிமன்றங்களில் நியமிக்கும் வரையில், இ-பைலிங் முறையை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-ஆம் நாளாக வெள்ளிக்கிழமையும் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு நடைபெற்றது.
புதுக்கோட்டை மாநகரிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் சங்கத் தலைவா் முத்தையன் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
மேலும், கந்தா்வகோட்டை, ஆவுடையாா்கோவில், அறந்தாங்கி, கீரனூா், திருமயம், பொன்னமராவதி, ஆலங்குடி, கறம்பக்குடி, மணமேல்குடி, இலுப்பூா், விராலிமலை ஆகிய நீதிமன்றங்களிலும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 900 வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா். இதனால், நீதிமன்றப் பணிகள் வெகுவாக பாதித்தன.
