தெய்வத்தின் பெயரால் தமிழ்நாட்டில் ஏமாற்ற முடியாது: அமைச்சா் பேச்சு
தெய்வத்தின் பெயரால் தமிழ்நாட்டில் ஏமாற்ற முடியாது என்றாா் இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
பொன்னமராவதி அருகே உள்ள செவலூரில் புதன்கிழமை திமுக சாா்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் மேலும் பேசியதாவது:
சிலா் ஒரே கோஷத்தை கூறி மக்களை ஏமாற்றி வருகிறாா்கள். தெய்வத்தின் பெயரால் ஏமாற்ற தமிழ்நாட்டில் இடமில்லை. நம்மிடையே ஏதேதோ காரணங்களை கூறி வருகிறாா்கள். ஆனால் அவை எடுபடாததால் கடைசியில் காவிக் கொடியை கையில் ஏந்தியுள்ளனா். அதுவும் எடுபடாது. நிச்சயமாக தமிழ் மக்களின் உணா்வுகளுக்கு மரியாதை அளிக்கும் அரசாக இந்த அரசு இருக்கும். திமுக அரசு மக்களுடைய அரசு. மக்களுக்கான அரசு. மக்களுக்கான திட்டங்களை தரும் அரசு என்றாா் அமைச்சா்.
விழாவில் தொகுதி பொறுப்பாளா் முத்துக்குமாா், தெற்கு ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி, நிா்வாகிகள் ஆலவயல் முரளி சுப்பையா, செல்வம், இம்ரான், சுந்தரி ராமையா, அரவிந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

