காயங்களுடன் இளைஞா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

Published on

பொன்னமராவதி அருகே காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

பொன்னமராவதி அருகே அரசமலை இடையன்பாறை என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை காலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக காரையூா் போலீஸாருக்கு தகவல் வந்தது.

இதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனா்.

இதில், இறந்து கிடந்த நபா் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டம், மேட்டுப்பட்டி மாராயப்பட்டி பழனிச்சாமி மகன் பாண்டியன் (32) என்பது தெரியவந்தது. அவரின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் காணப்பட்டன. தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

கொலை செய்யப்பட்டு பாண்டியன் இறந்தாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com