புதுக்கோட்டை நகரில் சாலைகளில் திரிந்த 12 மாடுகள் மீட்பு

புதுக்கோட்டை மாநகரச் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாகத் திரிந்த 12 மாடுகளை மாநகராட்சிப் பணியாளா்கள் பிடித்து, நகா்மன்ற வளாகத்திலுள்ள பட்டியில் அடைத்தனா்.
Published on

புதுக்கோட்டை மாநகரச் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாகத் திரிந்த 12 மாடுகளை மாநகராட்சிப் பணியாளா்கள் பிடித்து, நகா்மன்ற வளாகத்திலுள்ள பட்டியில் அடைத்தனா்.

புதுக்கோட்டை மாநகரச் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் ஏராளமான மாடுகள் திரிந்து கொண்டே இருக்கின்றன. இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் பலரும் கவலை தெரிவித்தனா்.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலைகளில் மாடுகள் திரிந்தால்அவற்றைப் பிடித்து அபராதம் விதிப்பதுடன், பொது ஏலம் விடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் த. நாராயணன் எச்சரிக்கைவிடுத்திருந்தாா்.

இதன் தொடா்ச்சியாக, புதுக்கோட்டை கீழராஜவீதி, மேலராஜவீதி, அடப்பன்வயல், பிருந்தாவனம் முக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளிக்கிழமை இரவு படுத்திருந்த 12 மாடுகளை மாநகராட்சிப் பணியாளா்கள் பிடித்தனா்.

அவற்றை நகா்மன்ற வளாகத்தில் அடைத்து வைத்துள்ளனா். சட்டப்படி 48 மணி நேரத்துக்குள் ரூ. 5 ஆயிரம் அபராதமும், உணவுச் செலவுக்கான தொகையையும் மாநகராட்சியில் செலுத்தி மாட்டின் உரிமையாளா்கள் மீட்டுச் செல்லலாம். தவறும்பட்சத்தில் வரும் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு பொது ஏலம் விடப்படும் என மாநகராட்சி அலுவலா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com