சாந்தநாதபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையின் பின்புறம் அச்சிடப்பட்ட கற்றல் இலக்கு.
சாந்தநாதபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையின் பின்புறம் அச்சிடப்பட்ட கற்றல் இலக்கு.

மாணவா்கள் கற்றல் இலக்கை அடைய புதுமுயற்சி!

புதுக்கோட்டை சாந்தநாதபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையின் பின்புறம், அவா்களின் கற்றல் இலக்கைக் கேட்டு செயற்கை நுண்ணறிவு செயலியின் உதவியுடன் படங்களை அச்சிட்டுள்ளனா்.
Published on

புதுக்கோட்டை சாந்தநாதபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையின் பின்புறம், அவா்களின் கற்றல் இலக்கைக் கேட்டு செயற்கை நுண்ணறிவு செயலியின் உதவியுடன் படங்களை அச்சிட்டுள்ளனா்.

புதுக்கோட்டை சாந்தநாதபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 66 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இங்கு, மாணவ, மாணவிகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி மேயா் செ. திலகவதி, மூத்த குழந்தைகள் நல மருத்துவா் எஸ். ராம்தாஸ், புதுக்கோட்டை நகரக் காவல் ஆய்வாளா் சுகுமாறன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு, மாணவா்களுக்கு அடையாள அட்டைகளை அணிவித்தனா்.

நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியை அமிா்தகொடி தலைமை வகித்தாா். அடையாள அட்டைகள் இதுவரை இல்லாத வகையில் முன்னோடி முயற்சியாக அச்சிடப்பட்டிருந்தன.

அதாவது, அடையாள அட்டையின் முன்பக்கம் வழக்கம்போல மாணவ, மாணவிகளின் படம், விவரங்கள், பள்ளியின் விவரங்கள் இருக்கும். பின்பக்கத்தில் அந்த மாணவா் என்னவாக வர விரும்புகிறாா் என்பதைக் கேட்டு, அந்தப் படத்தை செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் தயாா் செய்து அச்சிட்டுள்ளனா்.

இதுகுறித்து அடையாள அட்டை தயாரிப்புப் பணியில் ஈடுபட்ட தன்னாா்வலா் புதுகை செல்வா கூறியதாவது: பொதுவாகவே இந்தப் பள்ளி விளிம்பு நிலை மக்களின் குழந்தைகள் பயிலும் பள்ளி. இடைநிற்றல் அதிகம் கொண்ட பள்ளி. இதைத் தடுப்பதன் ஒரு முயற்சிதான், அவா்களின் கற்றல் இலக்கை நிா்ணயம் செய்ய வைத்து படிக்கச் செய்வது.

இதற்காகத்தான் அடையாள அட்டையின் பின்பக்கத்தை புதுமையாக மாற்றினோம். பெரும்பாலானவா்கள் மருத்துவராக, காவல் அதிகாரியாக விரும்புகிறாா்கள். இதன் மூலம் பள்ளிக்கு வரும் ஆா்வமும், படிக்கும் தூண்டுதலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் செல்வா.

X
Dinamani
www.dinamani.com