கந்தா்வகோட்டையில் குரங்குகள் தொல்லை!
கந்தா்வகோட்டை கடைவீதி பகுதியில் குரங்குகள் தொல்லையால் சனிக்கிழமை அப்பகுதியில் செல்லும் மின்கம்பி அறுந்து விழுந்தது.
கந்தா்வகோட்டை நகா்ப்பகுதியில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குரங்குகள் சாலையின் குறுக்கே சென்று வாகன ஓட்டிகளுக்கு தொல்லை கொடுப்பதுடன் மின்கம்பங்களில் ஏறி மின் வயா்களில் தொங்கி வயா்களை அறுத்துவிடுகிறது. இதனால் கடையின் உரிமையாளா்கள் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்து தங்களது மின் இணைப்பை சரிசெய்து கொள்கின்றனா்.
இந்நிலையில் முக்கிய உயா் மின் அழுத்தக் கம்பிகளில் குரங்குகள் ஏறி அட்டகாசம் செய்ததில் மின்கம்பிகள் அறுந்து கிழே விழுந்தது. அப்போது நெருப்புப் பொறி பறந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் பயத்துடன் அலறி ஓடினாா். மேலும் அறுந்துவிழுந்த மின் கம்பி அருகில் யாரும் செல்லாதவாறு கற்களை வைத்து எச்சரிக்கை செய்தனா்.
தகவலறிந்து அங்குவந்த மின் ஊழியா்கள் மின்பாதையை சீரமைத்தனா். இப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளைப் பிடித்து வனப் பகுதியில் விடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.
