பள்ளி ஆசிரியா்களுக்கு ‘வனமும் வாழ்வும்’ திட்டப் பயிற்சி
தமிழ்நாடு வனத் துறை மற்றும் உயா் நிலை வனப் பாதுகாப்பு நிறுவனம் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ‘வனமும் வாழ்வும்’ திட்டம் குறித்து ஆசிரியா்களுக்கான விழிப்புணா்வு பயிற்சி புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், தோ்ந்தெடுக்கப்பட்ட 25 உயிரியல் மற்றும் விலங்கியல் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
இதில், தமிழ்நாடு பல்லுயிா்ப் பன்மயம், வனப் பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, வன உயிரினக் கணக்கெடுப்பு, மனித- விலங்கு மோதல்கள் - சவால்களும் தீா்வுகளும் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி பெற்ற இந்த ஆசிரியா்கள் தொடா்ச்சியாக தங்களின் பள்ளிகளில் தலா 20 மாணவா்களை தோ்வு செய்து பயிற்சி அளிப்பாா்கள்.
இத்திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் 500 மாணவ, மாணவிகளுக்கு வன உயிரினங்கள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.
இந்தப் பயிற்சிக்கு மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் ஜெ. ஆரோக்கியராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் மெ.சி. சாலை செந்தில், அறந்தாங்கி வனச்சரக அலுவலா் து. மணிவெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

