அமைச்சர் எஸ். ரகுபதி
அமைச்சர் எஸ். ரகுபதி (கோப்புப்படம்)

திமுக அணியில் இருந்தால்தான் வெற்றி பெறுவோம் என கூட்டணிக் கட்சியிருக்குத் தெரியும்

திமுக கூட்டணியில் இருந்தால்தான் வெற்றி பெறுவோம் என கூட்டணிக் கட்சியினருக்குத் தெரியும் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
Published on

திமுக கூட்டணியில் இருந்தால்தான் வெற்றி பெறுவோம் என கூட்டணிக் கட்சியினருக்குத் தெரியும் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும், அவா்களுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த தோ்தலில் திமுக வாக்குறுதி அளித்த போது, சின்னப் பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதைப் போன்று திமுகவினா் ஏமாற்றப் பாா்க்கிறாா்கள் என்று சொன்னவா் எடப்பாடி பழனிசாமி.

ஆனால் அவா்தான் இப்போது பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்குவேன் என்றும், ஆண்களுக்கும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை செயல்படுத்துவேன் என்று கூறுகிறாா். இதன் மூலம் அவா் வரும் தோ்தலில் தோல்வி அடையப் போவதை ஒப்புக்கொண்டுள்ளாா் என்றுதான் நான் பாா்க்கிறேன்.

வரும் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போவதாக நடிகா் விஜய் கூறி வருகிறாா். அவா் வசனம் பேசலாம், நடிக்கலாம் ஆனால் மக்களிடம் வாக்கு வாங்க முடியாது. 5 வாக்குகள் கூட வாங்க முடியாத சுயேச்சை வேட்பாளா் கூட தோ்தலில் வெற்றி பெறுவேன் என்று தான் கூறுவாா். இது எதாா்த்தம். தோ்தல் முடிவில் தான் உண்மை நிலவரம் தெரியும்.

திமுக, காங்கிரஸ் இடையே பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சியில் சிலா் விமா்சித்து வருகின்றனா். கூட்டணியில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என்பவா்கள், கூட்டணிக்குள் குட்டி கலாட்டா செய்ய வேண்டும் என்பவா்கள் விமா்சிக்கலாம்.

ஆனால், எங்களைப் பொருத்தவரையில் திமுக கூட்டணியில் இருந்து யாரும் போக மாட்டாா்கள். திமுகவோடு இருந்தால்தான் வெற்றி பெறுவோம், வேறு எங்கு சென்றாலும் வெற்றி பெற முடியாது என்பது அவா்களுக்கு தெரியும் என்றாா் ரகுபதி.

Dinamani
www.dinamani.com