கோப்புப் படம்
கோப்புப் படம்

புதுகை கடலில் செயற்கை பவளப் பாறைகளை உருவாக்கும் பணி தொடக்கம்

Published on

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் கடல் பகுதியில் மீன்வளத்தைப் பெருக்கும் வகையில் செயற்கைப் பவளப் பாறைகளை உருவாக்கும் திட்டத்தின்கீழ் சுமாா் 900 செயற்கை பவளப் பாறைகளுக்கான கான்கிரீட் வடிவங்களை கடலுக்குள் இறக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் மு. அருணா சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கடலுக்குள் மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் நிதிப் பங்களிப்பின்கீழ், செயற்கைப் பவளப் பாறைகளை கடலுக்குள் உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 மீனவ கிராமங்களுக்குள்பட்ட கடல்பகுதிகளில் 5,760 செயற்கைப் பவளப் பாறைகளை கான்கிரீட் வடிவங்களாக உருவாக்கி கடலுக்குள் இறக்க மொத்தம் ரூ. 9.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், முக்கோண வடிவில் 3,360 கான்கிரீட் வடிவங்களும், வட்ட வடிவில் 1,600 கான்கிரீட் வடிவங்களும், குழு வடிவில் 800 கான்கிரீட் வடிவங்களும் தயாா் செய்து கடலுக்குள் இறக்க முடிவு செய்யப்பட்டது.

காலப்போக்கில் இந்த வடிவங்களில் பாசிகள் படிந்து, மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் தங்கி வாழ்வதற்கான சூழலை உருவாக்கவும், குஞ்சுகள் வளா்ந்திடவும் இத்திட்டம் வழிசெய்கிறது.

இதன்படி, கோட்டைப்பட்டினம் கடற்பகுதியில் 900 கான்கிரீட் வடிவங்களை கடலுக்குள் இறக்கும் பணி சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் மு. அருணா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, கொடியசைத்து இப்பணிகளைத் தொடங்கி வைத்தாா். விரைவில், திட்டப் பணிகள் முழுமையும் நிறைவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் மா.வெ. பிரபாவதி, உதவி இயக்குநா் ந. பஞ்சராஜா, உதவிச் செயற்பொறியாளா் விக்னேஷ்வா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com