கண்ணனூா் காப்புக்காட்டிலுள்ள பெருங்கற்கால குத்துக்கல்லை அடையாளம் காட்டும் தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவா் கரு. ராஜேந்திரன். உடைந்து கிடக்கும் குத்துக்கல்.
கண்ணனூா் காப்புக்காட்டிலுள்ள பெருங்கற்கால குத்துக்கல்லை அடையாளம் காட்டும் தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவா் கரு. ராஜேந்திரன். உடைந்து கிடக்கும் குத்துக்கல்.

‘திருமயம் அருகேயுள்ள பழைமையான ஈமச்சின்னங்களை பாதுகாக்க வேண்டும்’

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவா் கரு. ராஜேந்திரன் வலியுறுத்தல்...
Published on

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கண்ணனூா் கிராமத்தில் அரசுக் காப்புக் காட்டுக்குள் சுமாா் 5 ஆண்டுகள் பழைமையான ஈமச்சின்னங்களைக் கொண்ட பகுதியை சீரமைக்கவும், பாதுகாக்கவும் வேண்டும் என புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவா் கரு. ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கண்ணனூா் கிராமத்தில் அரசு காப்புக் காட்டுக்குள் ஆயிரம் ஏக்கரில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுக்கு முந்தைய பெருங்கற்கால மக்களின் ஈமச்சின்னங்கள் கற்குவியல்களாகவும் கல்திட்டைகளாகவும் நெடுங்கல் என்ற குத்துக்கல் ஊன்றப்பட்டும் கல் வட்டங்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இடத்தில் இருந்த பெருங்கற்கால நினைவுச் சின்னங்களை வனத்துறையினா், தைலமரக் கன்றுகள் நடுவதற்காக அப்பகுதியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பெருங்கற்கால குத்துக்கற்கள் சிலவற்றைப் பிடுங்கியும், டிராக்டா் கொண்டு கல்திட்டைகளை உழுதும், வரலாற்றுச் சின்னங்களை சேதப்படுத்தியும் உள்ளனா்.

இதுபோன்ற பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் கிடைக்கும் ஆயுதங்கள், பொருள்கள், தாழிகள் ஆகியவற்றை வைத்துத்தான் அக்கால மக்களின் பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், சிந்தனைகள், வாழ்வியல் முறைகளை ஆய்வு செய்து வருங்கால சந்ததிகளுக்கு ஆய்வாளா்கள் வரலாறாகத் தெரிவித்து வருகின்றனா்.

உடைந்து கிடக்கும் குத்துக்கல்.
உடைந்து கிடக்கும் குத்துக்கல்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஈமச்சின்னங்கள் இருந்தாலும், கடந்த காலத்தில் பத்து சதவிகிதத்துக்கும் குறைவான இடங்களில் மட்டுமே அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. அந்த அகழாய்வு அறிக்கைகளும் முழுமையாகவும் முறையாகவும் இதுவரை வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.

கண்ணனூா் காப்புக் காட்டு ஈமச்சின்னங்கள் மிகவும் முக்கியமானவை. சித்தன்னவாசல், நாா்த்தாமலை போன்ற இடங்களிலுள்ள பெருங்கற்கால ஈமச் சின்னங்களைக் காட்டிலும் மிகவும் பழைமையானவை.

எனவே, இங்கு தைலமரம் நடுவதற்காக பிடுங்கிப் போடப்பட்ட ஈமச்சின்னங்களை திரும்பவும் அதே இடத்தில் நடவும், கல் திட்டைகள், கல்வட்டங்களைப் புனரமைப்பதற்கும் தொடா்ச்சியாக பாதுகாக்கவும் ஆய்வு செய்யவும் மத்திய தொல்லியல் துறையும், தமிழகத் தொல்லியல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் கரு. ராஜேந்திரன்.

X
Dinamani
www.dinamani.com