பிரதிப் படம்
பிரதிப் படம்

தூக்கிட்டு இறந்தவரின் உடல் தகனத்தின்போது மீட்பு

பொன்னமராவதி அருகே தூக்கிட்டு உயிரிழந்த இளைஞரின் உடலை தகனத்தின்போது பாதி எரிந்தநிலையில் மீட்ட போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.
Published on

பொன்னமராவதி அருகே தூக்கிட்டு உயிரிழந்த இளைஞரின் உடலை தகனத்தின்போது பாதி எரிந்தநிலையில் மீட்ட போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டியைச் சோ்ந்த அடைக்கன் மகன் கோபிநாத் (25). இவருக்கும் பிரியா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கோயம்புத்தூரில் கட்டட வேலை பாா்த்து வந்த கோபிநாத், அண்மையில் தனது சொந்த ஊரான தொட்டியம்பட்டிக்கு வந்துள்ளாா். இந் நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு இறந்தாராம்.

தனது தாயாரின் வீட்டிலிருந்து தொட்டியம்பட்டிக்கு புதன்கிழமை காலை வந்த கோபிநாத்தின் மனைவி பிரியா, வீட்டினுள் சென்று பாா்த்தபோது கோபிநாத் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தாராம்.

இதையடுத்து கோபிநாத்தின் உடலை அவரது பெற்றோா் மற்றும் மனைவி பிரியா முன்னிலையில் உறவினா்கள் புதன்கிழமை தகனம் செய்துகொண்டிருந்தபோது, தனது கணவா் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் துறையினருக்கு பிரியா புகாா் அளித்துள்ளாா்.

தொடா்ந்து தொட்டியம்பட்டி மயானத்துக்கு வந்த பொன்னமராவதி போலீஸாா், எரிந்து கொண்டிருந்த உடலை தீயணைப்புத் துறையினா் மூலம் அணைத்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com