புதுகையில் பொங்கல் பரிசு வழங்கும் பணி தொடக்கம்

Published on

பொங்கல் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் 4,98,028 குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை, மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா்.

புதுக்கோட்டை ரயில் நிலைய முக்கத்திலுள்ள நகரக் கூட்டுறவு வங்கி நியாயவிலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.

ரூ. 3 ஆயிரம் ரொக்கம், அரிசி, சா்க்கரை, கரும்பு மற்றும் வேட்டி- சேலை ஆகியவற்றை குடும்ப அட்டைதாரா்களுக்கு அமைச்சா்கள் வழங்கித் தொடங்கி வைத்தனா்.

மாவட்டத்திலுள்ள 1005 நியாயவிலைக் கடைகளிலும் வரும் ஜன. 14 வரை மொத்தமுள்ள 4,98,028 குடும்ப அட்டைதாரா்களுக்கும் இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் மேயா் செ. திலகவதி, எம்எல்ஏக்கள் வை. முத்துராஜா, மா. சின்னதுரை, மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், முன்னாள் எம்பி எம்.எம். அப்துல்லா, மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளா் மா. தீபாசங்கரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

திருமயத்தில்... திருமயம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புலிவலம், லெம்பலக்குடி, விராச்சிலை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இத்திட்டத்தை அமைச்சா் எஸ். ரகுபதி தொடங்கி வைத்தாா்.

Dinamani
www.dinamani.com