பாபநாசம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புதன்கிழமை சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்மாபேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2016-17 ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு நிவாரண தொகையை விவசாயிகளுக்கு வழங்காததை கண்டித்தும், உடனடியாக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன் தஞ்சாவூர்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் முனியாண்டி தலைமையில், மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி முன்னிலையில் 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
அப்போது, அவர்கள் சாலியமங்கலம் வருவாய் சரகத்துக்குள்பட்ட 11 வருவாய் கிராமங்களின் பயிர் காப்பீட்டு பட்டியல் மற்றும் காப்பீட்டு அளவையின் சதவீதம் உள்ளிட்ட பட்டியல் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாபநாசம் வட்டாட்சியர் க.ராணி, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொறுப்பு)சோலராஜன், அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் செங்குட்டுவன், வருவாய் அதிகாரி மாலா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம்
பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, 11 வருவாய் கிராமங்களின் பயிர் காப்பீட்டு பட்டியல், மற்றும் பயிர் காப்பீட்டு அளவையின் சதவீதம் உள்ளிட்ட பட்டியலை காப்பீட்டு நிறுவனத்திலிருந்து பெற்று வழங்கினர். மேலும், பயிர் காப்பீட்டு நிவாரணத்தை விரைந்து பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.