கும்பகோணம் அருகே உடையாளூர் செல்வமகா காளியம்பாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நவசண்டி யாகம் நடைபெற்றது.
உடையாளூரில் கைலாசநாதர் சமேத சங்கரபார்வதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் இணைக் கோயிலாகவும், உடையாளூரின் எல்லைக் காவல் தெய்வங்களாகவும் பால்குளத்தி அம்மன் கோயில், செல்வமகா காளியம்பாள் கோயில்கள் உள்ளன.
இதில் செல்வமகா காளியம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் உலக நன்மை வேண்டி நவசண்டி யாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு நவசண்டி யாகம் கடந்த 13 ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து 14 ஆம் தேதி சித்திரை திருநாளையொட்டி வித்யா கணபதி ஹோமம், மகாஅபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம் ஆகியவை நடைபெற்றது.ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு நவசண்டியாகம் தொடங்கியது. முதலில் கோ பூஜை, கஜபூஜை, அஸ்வபூஜைகள் நடந்தன. பின்னர், கோட்டை வாசல் விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் நவசண்டி யாகத்துக்குரிய திரவியப் பொருள்களை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர்.
இதையடுத்து காலை 10 மணிக்கு தொடங்கி பகல் ஒரு மணி வரை நவசண்டியாகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாரதனையும், கலச அபிஷேகமும் நடைபெற்றது.
நவசண்டியாகம் நடைபெற்றபோது ஒரு மணி நேரம் மழை விடாது பெய்தது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இவ்விழாவைத் தொடர்ந்து வரும் 29 ஆம் தேதி கைலாசநாதர் சமேத சங்கரபார்வதிக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறவுள்ளது.