தனித் தமிழீழம் கனவு நனவாக உறுதியாக உழைப்போம் என தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உறுதியேற்கப்பட்டது.
கூட்டத்துக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்தார்.
இதில், தாயக விடுதலைக்காகத் தன்னுயிரை இழந்த மாவீரர்களின் தியாகத்தை தமிழினம் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூர்ந்து நெஞ்சார்ந்து போற்றும். எந்தப் புனித கனவுக்காக மாவீரர்கள் தங்களது இன்னுயிரை ஈந்தார்களோ, தனித் தமிழீழம் என்கிற புனித கனவை நிறைவேற்ற உயிர் உள்ளவரை உழைப்போம் என உறுதியேற்கப்பட்டது.
கஜா புயலால் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இயற்கை பேரிடரால் பல்லாயிரக்கணக்கான கால்நடைகளும், விலங்குகளும், லட்சக்கணக்கான மரங்களும், செடி, கொடிகளும் அழிந்துள்ளன. எனவே, மத்திய அரசு இந்த மாபெரும் அழிவைக் கருத்தில் கொண்டு, இதைத் தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும். மேலும், தமிழகத்துக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும்.
ராஜீவ் கொலை வழக்கில் சிக்குண்டு 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தவித்து வருகிற 7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், நடிகர் மன்சூர் அலிகான், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசு, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம். செரீப் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.