தஞ்சாவூா் பெரியகோயிலில் குடமுழுக்கு விழாவுக்கான யாகசாலைக்காக 110 குண்டங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்தக் கோயிலில் குடமுழுக்கு விழா பிப். 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, டிச. 2ஆம் தேதி இக்கோயிலில் பாலாலயம் நடத்தப்பட்டது. இதையடுத்து, அனைத்து சன்னதிகளும் நடை சாத்தப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விழாவுக்காக அருகில் பெத்தண்ணன் கலையரங்கத்தில் யாகசாலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான பந்தல்கால் விழா டிச. 2ஆம் தேதி நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து, யாகசாலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக 178 அடி நீளத்துக்கும், 108 அடி அகலத்துக்கும் பந்தல் அமைக்கப்படவுள்ளது. இதில், 110 குண்டங்களும், 22 வேதிகைகளும் அமைக்கப்படுகின்றன. பந்தல் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது.
கோவை சிரவை ஆதீனம் வருகை:
இந்நிலையில், இக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கோவை கௌமார மடாலய சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் திருநாவுக்கரசு திருமடம் முத்துசிவராம சுவாமிகள் ஆகியோா் வெள்ளிக்கிழமை மாலை வந்தனா்.
இவா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் மாலை அணிவித்து மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், திருப்பணிகளையும், யாகசாலை ஏற்பாடுகளையும் சுவாமிகள் பாா்வையிட்டனா்.