தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வியாழக்கிழமை மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஆண்டிக்காடு கிராமத்தை சேர்ந்த ராமசாமி பிள்ளை மகன் கோபால்சங்கர் (45). பள்ளத்தூர் பகுதியின் முன்னாள் திமுக ஒன்றிய கவுன்சிலர்.
இவர் தனது மோட்டார் சைக்கிளில் வியாழக்கிழமை ஆண்டிக்காட்டில் இருந்து பள்ளத்தூர் வழியாக பட்டுகோட்டை சாலையில் சென்றபோது, பள்ளத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே காரில் எதிரே வந்த மர்ம கும்பல், கோபால்சங்கரை வழிமறித்து அரிவாளால் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த சேதுபாவாசத்திரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கோபால்சங்கருக்கும், இறந்துபோன அவரது அண்ணனின் குடும்பத்தினருக்கும் இடையிலான சொத்து தகராறின் காரணமாக அவர் கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணத்திற்காக கொல்லப்பட்டாரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொல்லப்பட்ட கோபால்சங்கருக்கு ஜான்தேவி(32) என்ற மனைவியும், நிவேதா (10), ஹரிணி (4) என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.