புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு இடுபொருள்கள்
By DIN | Published On : 06th February 2019 09:40 AM | Last Updated : 06th February 2019 09:40 AM | அ+அ அ- |

பேராவூரணி வட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு அறிவித்த தொகுப்புத் திட்டத்தின் கீழ் விலையில்லா இடுபொருள்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி வட்டம், காலகம் பஞ்சாயத்துக்குள்பட்ட காலகம்-2 கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமமூர்த்தியின் தென்னந்தோப்பில் வேலை உறுதித் திட்டத்தின்கீழ் புதிய தென்னங்கன்றுகள் நடவு செய்வதற்கு குழிகள் தோண்டப்பட்டன.
இதைத் தொடர்ந்து, புதிய தென்னங்கன்றுகளை அரசின் முதன்மை செயலர் பிரதீப்யாதவ், ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, மாவட்ட கஜா மறுவாழ்வு கூடுதல் திட்ட இயக்குநர் இராஜகோபால் சுகாரா ஆகியோர் நடவு செய்தனர். மேலும், அக்கிராமத்தை சேர்ந்த 5 விவசாயிகளுக்கு இலவசமாக உளுந்து விதை மற்றும் திரவ உயிர் உரங்களும், 5 விவசாயிகளுக்கு எள் விதை மற்றும் திரவ உயிர் உரங்களும்,
25 விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.
கஜா புயல் நிவாரணம் குறித்து ஆட்சியர் பேசுகையில், பாதிக்கப்பட்ட அனைத்து தென்னை விவசாயிகளுக்கும் இத்தொகுப்பு திட்டத்தின் கீழ் உளுந்து, எள், தென்னங்கன்றுகள் யாவும் இலவசமாக வழங்கப்படும் என்றும், விழுந்த தென்னை மரங்களுக்கு பாகுபாடின்றி நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் நெடுஞ்செழியன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மந்திராசலம், வேளாண்மை உதவி
இயக்குநர் மாலதி மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...