அதிராம்பட்டினத்தில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட 25 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
அதிராம்பட்டினம் நகரில் சுமார் 200 க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் பேரூராட்சி செயல் அலுவலர் எல். ரமேஷ் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் பணியாளர்கள் நடத்திய ஆய்வில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்காகவும், பயன்பாட்டுக்காகவும் இருப்பு வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வில் தடைசெய்யப்பட்ட 25 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடைக்காரர்களுக்கு ரூ.13,500 அபராதமும் விதிக்கப்பட்டது.
உணவகங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தி பார்சல் கட்டுவதும், தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்வதும் குற்றச்செயல் என பேரூராட்சி நிர்வாகம் வணிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.