பள்ளி வாகனங்கள் ஆய்வில் 6 வாகனங்கள் தகுதி நீக்கம்
By DIN | Published On : 19th May 2019 08:48 AM | Last Updated : 19th May 2019 08:48 AM | அ+அ அ- |

கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வில் 6 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
இந்த ஆய்வில் கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குட்பட்ட 44 பள்ளிகளிலிருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இவற்றை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலைமையில், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் வெங்கிடுசாமி, தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகுமார், போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
இதில், பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் சரியாக உள்ளதா என்றும், ஓட்டுநர்கள் உரிமம், அவர்களுக்கான அடையாள அட்டை, வாகனத்தில் அவசர வழிகள், காற்றோற்றமுள்ள ஜன்னல்கள், வாகனத்தில் எளிதில் வெளியில் வரக்கூடிய அளவில் இருக்கைகள், தளம், முதலுதவி பெட்டி, படிக்கட்டுகள், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, தீயணைப்புக் கருவிகள், ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதுகுறித்துவட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாசலம் தெரிவித்தது:
கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குட்பட்ட 44 பள்ளிகளில் 159 வாகனங்கள் உள்ளன. இதில் 118 பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் 6 வாகனங்களில் உரிய பாதுகாப்பு கருவிகள், அவசர வழிகள் உள்ளிட்டவை இல்லாததால் அந்த வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
மற்ற 112 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 41 வாகனங்கள் பள்ளி நிர்வாகத்தினர் பராமரிப்பு செய்வதற்காகக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்த வாகனங்களும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களை பராமரிப்பு செய்தும் மே 31-க்குள் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்றார் அருணாசலம்.