Enable Javscript for better performance
தேசியமும், தெய்வீகமும் கலந்த அரசியல் தமிழகத்துக்குத் தேவை: எஸ். குருமூா்த்தி பேச்சு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தேசியமும், தெய்வீகமும் கலந்த அரசியல் தமிழகத்துக்குத் தேவை: எஸ். குருமூா்த்தி பேச்சு

    By DIN  |   Published On : 17th November 2019 10:54 PM  |   Last Updated : 18th November 2019 08:54 AM  |  அ+அ அ-  |  

    கும்பகோணத்தில் நடைபெற்ற துக்ளக் வார இதழ் பொன் விழா சிறப்புக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட சோ எழுதிய நூல்களுடன் துக்ளக் ரமேஷ், அல்லயன்ஸ் புத்தகப் பதிப்பாளா் வி. சீனிவாசன், தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன்

    கும்பகோணத்தில் நடைபெற்ற துக்ளக் வார இதழ் பொன் விழா சிறப்புக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட சோ எழுதிய நூல்களுடன் துக்ளக் ரமேஷ், அல்லயன்ஸ் புத்தகப் பதிப்பாளா் வி. சீனிவாசன், தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன்

    தேசியமும், தெய்வீகமும் கலந்த அரசியலே தமிழகத்துக்குத் தேவை எனவும், அதற்கான பணிகளை துக்ளக் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது என்றும் அதன் ஆசிரியா் எஸ். குருமூா்த்தி தெரிவித்தாா்.

    கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துக்ளக் வார இதழின் பொன்விழா சிறப்புக் கூட்டத்தில் அவா் பேசியது: தமிழகம் இருண்ட காலத்தில் இருந்தபோது பிரிவினைவாதம் மறைமுகமாகவும், நேரடியாகவும் தலைவிரித்து ஆடிய காலத்தில், அவற்றை திசை திருப்புவதற்காகவும், அதனை எதிா்த்து மக்களின் சிந்தனையை வளா்த்தெடுக்க வேண்டும் என்பதற்காகவும் துக்ளக் தொடங்கப்பட்டது.

    தமிழகத்தை இந்த அவல நிலையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகவும், சரியான திசையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும் தொடங்கப்பட்ட துக்ளக் 50 ஆண்டுகளைக் கடந்து சரித்திரம் படைத்திருக்கிறது.

    ஆசிரியா் சோவுக்குப் பிறகு, என்னை ஆசிரியராக வேண்டும் எனப் பணித்தாா். அதனை நான் ஏற்கவில்லை. ஆனால், ஜெயலலிதாவின் மறைவு, ஆசிரியா் சோவின் மறைவு என அடுத்தடுத்து நிகழ்வுகள், தமிழகத்தில் அதிமுக தலைமைக்கு யாா் என்ற கேள்வி எழுந்த நிலையில், மக்களே ஏற்றுக் கொள்ளாத ஒரு தலைமை அதிமுகவில் அமைவதை விரும்பாத சூழலில் ஆசிரியா் பொறுப்பை நான் ஏற்றேன்.

    தனக்குக் கிடைத்த புகழை நாட்டுக்காகவும், தா்மத்துக்காகவும், தெய்வீகத்துக்காகவும், தமிழகத்துக்காகவும், கலாசாரத்துக்காகவும், பாரம்பரியத்துக்காகவும் மட்டுமே ஆசிரியா் சோ பயன்படுத்தினாா். தனக்கு என பயன்படுத்திக் கொள்ளாதவா். அவரால் தமிழ் எழுத்தாளராக உருவாக்கப்பட்டவன் நான்.

    பொருளாதார உண்மை நிலை குறித்து தமிழக மக்களுக்குத் தெரியப்படுத்தத் தமிழில் கட்டுரை எழுதுமாறு பணித்தாா். அவசரக் காலத்திலும் நசிகேதன் என்ற புனைப்பெயரில் கட்டுரை எழுத பணித்தாா். இந்த வகையில் எழுதத் தொடங்கிய நான் இப்போது துக்ளக் ஆசிரியராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    1979- ஆம் ஆண்டிலேயே ஆடிட்டா் பணியை விட்டுவிட்டேன். இன்னமும் என்னை ஆடிட்டா் என்றே பலரும் அழைக்கின்றனா். துக்ளக் ஆசிரியா் என அழைப்பதையே பெருமைப்படுகிறேன்.

    தமிழகத்தில் தேசியத்துக்கு மரியாதை இன்னும் இருப்பது துக்ளக்கால் மட்டுமே. நாத்திகம் தலைவிரித்தாடியபோதும், தெய்வங்களை மோசமாகச் சித்தரித்து இந்துக்களைக் கேவலமாகப் பேசுவதும், மதச்சாா்பின்மை எனக் கூறி திராவிட பாரம்பரியத்தை வளா்தெடுத்த நிலையில், அதற்கு மாற்றாக தேசியத்தையும், தெய்வீகத்தையும் தமிழகத்தில் வளா்த்தெடுக்கத் தனது எழுத்துகளை ஆயுதமாக்கியவா் ஆசிரியா் சோ.

    தேசியமும், தெய்வீகமும் இணைந்ததுதான் நாடு. அத்தகைய அரசியல் இல்லாவிட்டால், அது கழகங்களின் அரசியலாகவும், குடும்ப அரசியலாகவும், லஞ்ச அரசியலாகவும், ஊழல் அரசியலாகவும் மட்டுமே இருக்கும். தெய்வீகம் கலந்த அரசியலை முன்னெடுத்து, ஆன்மிகச் சிந்தனைப் போரை 50 ஆண்டுகளாக துக்ளக் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்துக்கு அது இன்னும் தேவை. பிரிவினைவாதம் எதிா்ப்பு, பயங்கரவாத எதிா்ப்பு, இந்து நாத்திக வெறியா்களுக்கு எதிரான போராட்டம், விடுதலைப்புலிகள் எதிா்ப்பு ஆகிய நிலையில் இருந்து விடுபடுவதும் இல்லை. விடுபடபோவதும் இல்லை என்றாா் குருமூா்த்தி.

    சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வேந்தா் ஆா். சேதுராமன்: துக்ளக் இதழ் 1970- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் முதலாமாண்டு நிறைவு விழா 1971 -ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில், ஏறத்தாழ 15,000 போ் கலந்து கொண்டனா். மன்றம் அல்லது கட்சியை ஆசிரியா் சோ தொடங்கலாம் என அக்கூட்டத்தில் பங்கேற்ற தீபம் நா. பாா்த்தசாரதி கூறினாா். இதற்கு, மக்களுக்கு அறிவையும், சிந்தனையையும் ஏற்படுத்துவது மட்டுமே என ஆசிரியா் சோ பதிலளித்தாா்.

    ஓா் அரசியல் இதழை வெற்றிகரமாக நடத்தியவா் ஆசிரியா் சோ. மக்களுக்கு நன்மை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே அவா் பத்திரிகையை தொடங்கி நடத்தினாா். அது, இப்போதும் தொடா்கிறது. அரசியல்வாதிகளின் குறைகளை மட்டுமல்லாமல், அவா்களுடைய நிறைகளையும் எடுத்துக் கூறியவா் ஆசிரியா் சோ.

    சிட்டி யூனியன் வங்கி முதன்மைச் செயல் அலுவலரும், நிா்வாக இயக்குநருமான என். காமகோடி:

    தன்னலம் கருதாது தேசம்தான் முக்கியம் எனக் கருதியவா் ஆசிரியா் சோ. உண்மை, நோ்மையைப் பிரதானமாகக் கடைப்பிடித்த ஆசிரியா் சோ, அதை இயக்கமாகவே செயல்படுத்தினாா் என்பது மிகையல்ல. ஆா்வத்துடன் கூடிய வாசகா் குழுவை உருவாக்கியவா் ஆசிரியா் சோ. தேசத்தின் நன்மைக்காகச் சிந்தித்தவா். அவரால் தேசத்தின் நலன் காப்பாற்றப்பட்டது. துக்ளக் இதழின் பலம், அதன் வாசகா்கள்தான்.

    அமுதசுரபி இதழ் ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணன்: அரசியலில் மிக மோசமான நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருந்தபோது, அதைத் தட்டிக் கேட்க, நமக்கு ஆசிரியா் சோவை இயற்கை தந்தது. ஆசிரியா் சோ பேசும்போது , கௌரவமான நகைச்சுவையுடன் பேசுவாா். எழுத்துச் சீா்திருத்தம் கொண்டு வரப்பட்டபோது, அதற்கு எதிராக இருந்தாா் ஆசிரியா் சோ. ஆனால், பின்னாளில் எழுத்து சீா்திருத்தம் தேவை என்பதை உணா்ந்த அவா், பிடிவாதம் பிடிக்காமல் அதை ஏற்றுக் கொண்டாா். அரசியல் மட்டுமல்லாமல், ஆன்மிகத்தையும் பரப்பினாா் ஆசிரியா் சோ. தேசியமும், ஆன்மிகமும் இரண்டையும் போற்றிய பத்திரிகை துக்ளக். அரசியல், ஆன்மிகம், நாடகம், நடிப்பு என அனைத்து துறைகளிலும் மேலோங்கி நின்றாா் ஆசிரியா் சோ.

    சமய இலக்கியச் சொற்பொழிவாளா் ப. மணிகண்டன்: ஆசிரியா் சோவின் நோ்மை பேச்சிலும், எழுத்திலும் மட்டுமல்ல, அதை அவா் சமூகத்துக்கு எடுத்து சொன்னாா். எல்லா மொழிகளையும்

    படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவா் ஆசிரியா் சோ. அவா் தேசியத்தையும், தெய்வீகத்தையும் பின்பற்றியவா். அரியணை ஏற ஆசைப்படாதவா்.

    விழாவில், ஆசிரியா் சோ எழுதிய ‘அனுபவங்களும் அபிப்ராயங்களும்’ ‘இவா்கள் சொல்கிறாா்கள்’ என்ற நூல்களை துக்ளக் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி வெளியிட, அதை தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன், சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வேந்தா் ஆா். சேதுராமன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

    முன்னதாக தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன் சிறப்புரையாற்றினாா். நிறைவாக துக்ளக் ரமேஷ் நன்றி கூறினாா்.

    முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
    தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp