கும்பகோணம்: கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் ஏ.டி.எம்.-இல் கொள்ளையடிக்க முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பந்தநல்லூா் முதன்மைச் சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. இந்த இயந்திரத்தில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் ஊழியா்கள் பணம் வைத்து சென்றனா்.
இந்நிலையில், இந்த ஏ.டி.எம்.க்கு ஞாயிற்றுக்கிழமை காலை வாடிக்கையாளா்கள் சென்றபோது, இயந்திரத்தில் உள்ள பணப்பெட்டியின் மீது மேல்புறம் பொருத்தப்பட்டுள்ள கதவு திறந்து கிடந்தது.
தகவலறிந்த பந்தநல்லூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்தனா். நள்ளிரவில் ஏ.டி.எம். இயந்திரத்தை கொள்ளையா்கள் உடைத்துள்ளதும், பணப் பெட்டகத்தை உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சியைக் கைவிட்டு சென்றதும், இதன் மூலம் அதில் இருந்த ரூ. 22 லட்சம் பாதுகாப்பாக இருப்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து பந்தநல்லூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.