வறட்சிக்கு நிவாரனம், உழவுக்கு மானியம் வழங்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்றார் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்.
திருவாரூர் மாவட்டம், நெடும்பலம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 200 விவசாயிகளுக்கு உழவு மானியத்தொகைக்கான ஆணையை வழங்கி, மேலும் அவர் பேசியது:
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களைத் தீட்டி, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் முதன்முதலில் வறட்சிக்கு நிவாரணம் மற்றும் உழவுக்கு மானியம் வழங்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான்.
உழவுக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் மாநிலம் முழுவதும் 5 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.30 கோடி மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், திருவாரூர் மாவட்டத்துக்கு 1. 75 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.10.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு தேவையான நீர் மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. மழைநீரை சேமிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றார் அவர்.
விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள் தலைமை வகித்தார். திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவை உறுப்பினர் ப.ஆடலரசன் முன்னிலை வகித்தார்.
வேளாண் இணை இயக்குநர் ப.சிவக்குமார், உதவி இயக்குநர்கள் ஹேமா ஹெப்சிபா நிர்மலா, இராம.சாமிநாதன், திருத்துறைப்பூண்டி நிலவள வங்கித் தலைவர் சிங்காரவேல் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.