ஜல் சக்தி அபியான் திட்டத்தில் தஞ்சாவூர் முதலிடம்
By DIN | Published On : 22nd September 2019 03:36 AM | Last Updated : 22nd September 2019 03:36 AM | அ+அ அ- |

ஜல் சக்தி அபியான் திட்டத்தில் தமிழக அளவில் தஞ்சாவூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது என்றார் அத்திட்டத்துக்கான மத்திய ஆய்வுக் குழுத் தலைவர் பிரமோத் குமார் பதக்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற மூன்றாம் கட்ட ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, அவர் மேலும் பேசியது:
ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட்டத்தில் 90 சதவிகிதப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் ஜல்சக்தி அபியான் தர வரிசைப் பட்டியலில் தஞ்சாவூர் மாவட்டம் ஆறாவது இடத்திலும், தமிழக அளவில் முதலிடத்திலும் உள்ளது.
ஜல் சக்தி அபியான் கீழ் பொதுப் பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, இதர துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகள், மரக்கன்றுகள் நடுதல், மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல், காடுகள் வளர்த்தல் ஆகிய பணிகள் சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பிற மாவட்டங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. ஜல் சக்தி அபியான் திட்டப் பணிகளின் மூலம், அனைத்துப் பகுதிகளிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருப்பது ஆய்வு மூலமாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஜல் சக்தி அபியான் திட்டப் பணிகளை அனைத்துத்துறை அலுவலர்களும் மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்றார் பதக். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.