கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை இறைச்சிக்கடை தொழிலாளி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கும்பகோணம் அருகே திருப்பந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் செல்வமணி (40). இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர். சிறை தண்டனை அனுபவித்த இவர் நன்னடத்தை காரணமாக 6 மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார். தற்போது நாச்சியார்கோவில் பகுதியிலுள்ள தனது சித்தப்பா இறைச்சிக் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இவர் ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பந்துறை கூட்டுறவு சங்கம் அருகேயுள்ள திடலில் தனது நண்பர்களுடன் மது அருந்தினார். அப்போது, இவர்களுக்கும் அங்கு மது அருந்திய மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். செல்வமணி தனது வீட்டில் மாலையில் இருந்தார்.
அப்போது, அங்கு வந்த சிலர் இவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில், பலத்தக் காயமடைந்த செல்வமணி நிகழ்விடத்திலேயே பலியானார். இதுகுறித்து நாச்சியார்கோவில் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.