127 தற்காலிக பேராசிரியர்கள் பணி நீக்கம்: ஒரத்தநாடு அரசு கல்லூரியில் தர்னா
By DIN | Published On : 26th February 2020 06:22 PM | Last Updated : 26th February 2020 06:22 PM | அ+அ அ- |

ஒரத்தநாடு: ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்த 127 தற்காலிக பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தர்னாவில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரத்தநாட்டில் கடந்த 2006-ஆம் ஆண்டு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மூலம் மகளிர் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 14 ஆண்டுகளாக செயல்படும் இந்தக் கல்லூரியில் 127 தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், இந்தக் கல்லூரி கடந்த 2019-ஆம் ஆண்டு தன்னாட்சி அமைப்பு கொண்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாறியது. அதனடிப்படையில் தற்காலிக பணியாளராகப் பணியாற்றிய பேராசிரியர் மற்றும் அலுவலர்களை அரசு உடனடியாக நீக்கம் செய்தது.
இதைக் கண்டித்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கல்லூரி முன்பாக புதன்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராசிரியர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, ஒரத்தநாடு சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன் தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி பேராசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்தும் தர்னா போராட்டம் நடைபெற்றதால் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.