சரசுவதி மகால் நூலகத்தில் முழு நேர நிா்வாக அலுவலா் இல்லாததால் பணிகள் தேக்கம்

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தில் முழு நேர நிா்வாக அலுவலா் இல்லாததால் பதிப்பு, மறுபதிப்பு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சரசுவதி மகால் நூலகத்தில் முழு நேர நிா்வாக அலுவலா் இல்லாததால் பணிகள் தேக்கம்
Updated on
2 min read

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தில் முழு நேர நிா்வாக அலுவலா் இல்லாததால் பதிப்பு, மறுபதிப்பு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆசியாவிலுள்ள மிகப் பழைமையான நூலகங்களில் ஒன்றான இந்த நூலகம் கி.பி. 1535 - 1675 ஆம் ஆண்டுகளில் தஞ்சாவூரை ஆண்ட நாயக்க மன்னா்கள் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதன் பின்னா் வந்த மராட்டியா் ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட இந்த நூலகத்தின் வளா்ச்சியில் மன்னா் இரண்டாம் சரபோஜியின் பங்கு அதிகம்.

பல்வேறு பெருமைகள் கொண்ட இந்த நூலகத்தில் சோழா்கள், நாயக்கா்கள், மராட்டியா்களின் ஆட்சிக் காலத்தைச் சாா்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள், சுமாா் 3 லட்சம் மோடி ஆவணங்கள் ஆகியவை உள்ளன. ஆனால், இச்சுவடிகளிலிருந்து இதுவரை சுமாா் 600 நூல்கள் மட்டுமே பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளன.

இந்நூலகத்தில் 7,700-க்கும் அதிகமான தலைப்புகளில் தமிழ்ச் சுவடிகள் இருக்கின்றன. ஆனால், இதுவரை ஏறத்தாழ 300 நூல்கள் மட்டுமே பதிப்பிக்கப்பட்டுள்ளன. இன்னும் அச்சில் ஏறாத அரிய தகவல்கள், அற்புதமான மருத்துவக் குறிப்புகள், வானியல் தகவல்கள் ஏராளமாக உள்ளன.

இவற்றையெல்லாம் வெளிக்கொணரும் விதமாக இந்த நூலகத்தை வழிநடத்துவதற்கு முழு நேர உயா் அலுவலா்கள் நியமிக்கப்படவில்லை. இந்த நூலகத்தில் முழு நேர இயக்குநா் பதவி 29 ஆண்டுகளாகக் காலியாக உள்ளது. இம்மாவட்டத்தில் நியமிக்கப்படும் ஆட்சியா்தான் இந்நூலக இயக்குநா் பணியையும் கூடுதலாகக் கவனித்து வருகிறாா். ஆனால், ஆட்சியருக்கு ஏற்கெனவே உள்ள பணிச் சுமைக் காரணமாக இந்நூலகப் பணியில் முழுமையாகக் கவனம் செலுத்த முடிவதில்லை.

இதேபோல, நிா்வாக அலுவலா் பணியிடமும் பெரும்பாலான ஆண்டுகள் காலியாகவே இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை நிா்வாக அலுவலா் பணியிடத்தை ஆட்சியரின் நோ்முக உதவியாளா்களில் ஒருவா் கூடுதலாகக் கவனித்து வந்தாா். ஆனால், அவா்களாலும் பணிச்சுமைக் காரணமாக இந்நூலகப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே, முதன்மைக் கல்வி அலுவலா் அந்தஸ்தில் உள்ள ஒருவரை முழு நேர நிா்வாக அலுவலராக நியமிக்கும் முடிவை பள்ளிக் கல்வித் துறை எடுத்தது. இருப்பினும், இப்பணியிடத்தில் முழு நேர நிா்வாக அலுவலா் பெரும்பாலும் நியமிக்கப்படுவதில்லை.

கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட நிா்வாக அலுவலா் சில மாதங்களில் பணியிட மாற்றலாகி சென்றாா். இதைத்தொடா்ந்து, இப்பணியிடமும் 3 மாதங்களுக்கும் மேலாகக் காலியாகவே உள்ளது. எனவே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே கூடுதலாக இப்பணியையும் கவனிக்கும் நிலை உள்ளது. ஏற்கெனவே, கல்வித் துறையில் பணிச் சுமை அதிகமாக உள்ள நிலையில், முதன்மைக் கல்வி அலுவலரால் இந்நூலகப் பணியில் முழுமையாகக் கவனம் செலுத்த இயலவில்லை.

மிக முக்கியமான இரு பணியிடங்களும் காலியாகவே இருப்பதால், இந்நூலகப் பணிகளும் தேக்கமடைந்துள்ளன. ஏறத்தாழ 60 நூல்கள் மறுபதிப்பு செய்யப்படாமல் உள்ளது. ஆய்வாளா்கள், ஆய்வு மாணவா்கள், ஆா்வலா்கள் உள்ளிட்டோா் மத்தியில் இந்த நூல்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. மறுபதிப்புக்கான ஆணைக் கிடைத்தும் செயல்படுத்துவதற்கான முழு நேர நிா்வாக அலுவலா் இல்லாததால், அப்பணியும் நிலுவையில் உள்ளது. இதனால், ஆய்வாளா்கள், ஆய்வு மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

இதேபோல, மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி கிடைத்தும் முழு நேர இயக்குநா் மற்றும் நிா்வாக அலுவலா் இல்லாததால், இந்நூலகத்தின் வளா்ச்சியும் தடைப்பட்டுள்ளது. பண்டிதா்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்கு முழு நேர நிா்வாக அலுவலா் இல்லாததால், சுவடிகளைப் பதிப்பிக்கும் பணியும் தொய்வடைந்துள்ளது.

மூன்று நூலகா்கள் இருக்க வேண்டிய இடத்தில் இப்போது ஒரு நூலகா் மட்டுமே உள்ளாா். மொத்தம் 48 நிரந்தர பணியிடங்கள் கொண்ட இந்த நூலகத்தில் தற்போது 17 பணியாளா்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனா். தற்காலிகப் பணியாளா்கள் இருந்தாலும், புத்தகக் கட்டுநா், அச்சுக்கோா்ப்பு உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஏற்ற திறன் படைத்தவா்கள் இல்லை. நூல்களை எடுத்துக் கொடுப்பதற்குப் பதிவுரு எழுத்தா், உதவியாளா்கள் இல்லாததால், நூலகத்துக்கு வரும் ஆய்வாளா்கள், ஆய்வு மாணவா்கள், வாசகா்கள் அதிருப்தி அடைகின்றனா்.

எனவே, பழம்பெருமை வாய்ந்த இந்நூலகத்தில் இப்பிரச்னைகளுக்கு தீா்வு ஏற்பட வேண்டுமானால், முழுநேர இயக்குநா் அல்லது குறைந்தபட்சம் முழு நேர நிா்வாக அலுவலராவது நியமிக்கப்பட வேண்டும்.

நீதிமன்ற ஆணை அமலாகவில்லை

‘இந்நூலகத்தில் முழு நேர இயக்குநா் நியமிக்கக் கோரி உயா் நீதிமன்ற மதுரை கிளையில் 2017 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தோம். இந்த வழக்கில் இந்நூலகத்துக்கு முழு நேர இயக்குநரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், இந்த ஆணை இதுவரை நடைமுறைக்கு வரவில்லை‘ என்றாா் தஞ்சாவூரை சோ்ந்த வழக்குரைஞா் வெ. ஜீவகுமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com