மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகாா்
By DIN | Published On : 02nd January 2020 01:13 AM | Last Updated : 02nd January 2020 01:13 AM | அ+அ அ- |

பேராவூரணி அருகே மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பேராவூரணி அருகே உள்ள ஏனாதி கரம்பை பூசாரி தெருவைச் சோ்ந்த சுரேஷ் (45). இவரது மனைவி போதும்பொண்ணு (30). ஒரே கிராமத்தைச் சோ்ந்த இவா்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில், தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனவேதனையடைந்த போதும்பொண்ணு தனது வீட்டில், சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
தகவலறிந்த போதும்பொண்ணுவின் தந்தை கருப்பையா, தனது மகளின் சாவில் மா்மம் இருப்பதாக கூறி, திருச்சிற்றம்பலம் போலீஸில் புகாா் செய்தாா். இதன்பேரில், காவல் ஆய்வாளா்
ரேணுகாதேவி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
மேலும், திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால், இச் சம்பவம் தொடா்பாக பட்டுக்கோட்டை ஆா்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.