காவிரியில் தண்ணீர் வராததால் கல்லணை திறப்பு தாமதமாகிறது.
டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணை உரிய காலத்தில் திறந்துவிடப்பட்டது.
இந்தத் தண்ணீர் கரூர் மாவட்டத்திற்கு ஜூன் 13-ம் தேதி வந்தடைந்தது.
இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டம், முக்கொம்புக்கு திங்கள் கிழமை பிற்பகல் வந்தது. எனவே கல்லணைக்கு திங்கள்கிழமை இரவு தண்ணீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையொட்டி கல்லணை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணி அளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வந்துள்ளனர்.
ஆனால் செவ்வாய்க்கிழமை 11 மணியை கடந்தும் தண்ணீர் வந்தடையாததால் கல்லணை திறப்பு தாமதமாகிறது. தற்போது தண்ணீர் வேங்கூரை தாண்டி வந்து கொண்டிருப்பதால் பிற்பகலில் கல்லணை திறப்பு நடைபெற வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.