மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகள் ஏமாற்றம் அளிப்பதால், தமிழ்நாட்டில் 3,000 இடங்களில் மே 19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் தெரிவித்தது: கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், பொருளாதார நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடி ரூ. 20 லட்சம் கோடிக்கு அறிவித்தார். இதைத்தொடர்ந்து நிதி அமைச்சர் 3 நாட்களாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்த அறிவிப்புகள் ஏமாற்றம் அளிக்கும் விதமாக வெற்று அறிவிப்புகளாக இருக்கின்றன.
மாநிலங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும்.
தொழிலாளர்களின் இழப்பை ஈடு செய்ய நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் பாதிப்புக்கு நேரடி இழப்பீடு கொடுக்க வேண்டும். கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும். சிறு குறு தொழில்களைப் காப்பாற்றப் பொருளாதார ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், இவையெல்லாம் நிறைவேற்றப்படாத காரணத்தால், நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே 19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 3,000-க்கும் அதிகமான இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
கட்சி அலுவலகங்கள், தோழர்களின் வீடுகள் உள்ளிட்டவற்றின் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழ்நாட்டில் ஏற்கெனவே கரோனா தொற்றால் 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் இன்னும் 10,000 பேர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றார் முத்தரசன்.
அப்போது, கட்சியின் மாவட்டச் செயலர் மு.அ. பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.