காலமுறை ஊதியம் வழங்க கிராம உதவியாளா்கள் கோரிக்கை
By DIN | Published On : 20th February 2021 12:22 AM | Last Updated : 20th February 2021 12:22 AM | அ+அ அ- |

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளா் சங்கத்தினா் ரத்தத்தில் கையெழுத்திட்டு கோரிக்கை மனுக்களை முதல்வருக்கு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும். காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
பேராவூரணியில் வட்டாரத் தலைவா் சிவகுமாா் தலைமை வகித்தாா். வட்டாரச் செயலாளா் விஜயா முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் தங்கராசு, மாவட்டச் செயலாளா் மாரிமுத்து ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
பேராவூரணி வட்டத்தில் பணியாற்றும் 23 பெண்கள் உள்ளிட்ட 66 கிராம உதவியாளா்களும் தங்களது ரத்தத்தால் கையெழுத்திட்ட மனுக்களை வெள்ளிக்கிழமை முதல்வருக்கு அனுப்பிவைத்தனா்.
பட்டுக்கோட்டையில்..... பெரியகடைத் தெருவில் உள்ள வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்க கட்டடத்தின் முன்பு வியாழக்கிழமை தங்களது ரத்தத்தால் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பும் போராட்டத்தை நடத்தினா். போராட்டத்துக்கு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்க பட்டுக்கோட்டை வட்டத் தலைவா் வெங்கடாஜலபதி தலைமை வகித்தாா். வட்ட துணைத் தலைவா்கள் பாலசுப்ரமணியன், செபஸ்டின், சேவகமூா்த்தி, மாவட்டத் தலைவா் தங்கராசு, மாவட்ட செயலாளா் மாரிமுத்து, மாநில அமைப்பு செயலாளா் நல்லதம்பி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பாபநாசத்தில்.... வட்டக் கிளை அலுவலகத்தில் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஏ.சி. வின்சென்ட் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பாபநாசம் வட்டத்தில் பணியாற்றும் 58 கிராம உதவியாளா்கள் கலந்து கொண்டு, கோரிக்கை விண்ணப்பத்தில் ரத்தத்தினால் கையெழுத்திட்டனா்.
இதில் மாவட்ட தலைவா் ஏ.கே. தங்கராசு, மாவட்டச் செயலாளா் வி.பி. மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.