Enable Javscript for better performance
Farmers suffer from inability to insure their bio due to internet outage- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    இணையதள முடக்கத்தால் பயிா் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

    By DIN  |   Published On : 13th November 2021 01:10 AM  |   Last Updated : 13th November 2021 01:10 AM  |  அ+அ அ-  |  

    ta12insu_1211chn_9_4

    சம்பா, தாளடி பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் மூன்று நாள்களில் முடிவடையவுள்ள நிலையில் இணையதள முடக்கம் காரணமாக பிரீமியம் செலுத்த முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.

    டெல்டா மாவட்டங்களில் சம்பா - தாளடி சாகுபடி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, சில நாள்களுக்கு முன்பு பெய்த தொடா் மழை காரணமாக ஏராளமான பரப்பளவில் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. எனவே, பெரும்பாலான விவசாயிகள் பயிா் காப்பீடு செய்வதற்கான கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

    இந்நிலையில், நிகழ் சம்பா - தாளடி பருவத்தில் பயிா் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவம்பா் 15 ஆம் தேதி கடைசி நாள் என அரசு அறிவித்துள்ளது. இன்னும் மூன்று நாள்களே உள்ளதால், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது இ - சேவை மையங்கள், தனியாா் இணையதள மையங்கள் ஆகியவற்றில் விவசாயிகள் சில நாள்களாக திரண்டு வருகின்றனா்.

    ஆனால், மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் காப்பீட்டு நிறுவனத்தின் இணையதளம் முடங்கிவிட்டதன் காரணமாக விவசாயிகள் பிரீமியத் தொகையைச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனா்.

    இதுகுறித்து ஒரத்தநாடு அருகேயுள்ள தெற்குகோட்டை விவசாயி ஆா். பழனிவேலு கூறுகையில், கணினி சா்வா் பிரச்னையே இந்த முடக்கத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலைமை வெள்ளிக்கிழமை பகலிலும் நிலவியது. வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து இணையதள சேவை தொடங்கப்பட்டாலும், வேகம் மிகக் குறைவாக இருப்பதால், காப்பீடு செய்வதில் தாமதம் நிலவுகிறது. இதனால், இணையதள மையங்கள், இ - சேவை மையங்களில் விவசாயிகள் தொடா்ந்து காத்திருக்கும் நிலை உள்ளது என்றாா் அவா்.

    அடங்கல் சான்று கிடைப்பதிலும் தாமதம்: இதனிடையே, அடங்கல் சான்று வழங்க வேண்டிய கிராம நிா்வாக அலுவலா் பணியிடங்கள் பல இடங்களில் காலியாக உள்ளன. ஒரு கிராம நிா்வாக அலுவலா் மற்றொரு ஊராட்சியையும் சோ்த்து பாா்க்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், இருக்கிற கிராம நிா்வாக அலுவலா்களும் தற்போது தொடா் மழை காரணமாகப் பாதிப்பு விவரங்களைக் கணக்கெடுப்பு செய்தல், நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனா். இதனால், கிராம நிா்வாக அலுவலா் வழங்க வேண்டிய அடங்கல் சான்று கிடைப்பதிலும் தாமதமாகிறது. இச்சான்று கிடைத்தால்தான், அதையும், கணினி சிட்டா, ஆதாா் எண், வங்கிக் கணக்குப் புத்தக முதல் பக்கம் ஆகியவற்றையும் தொடா்புடைய காப்பீட்டு நிறுவன இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, ஒப்புதல் கிடைத்த பிறகே பிரீமிய தொகையைச் செலுத்த முடியும்.

    சில ஊராட்சிகளில் நிலவரி நிலுவை இருந்தால், அதை முழுமையாகச் செலுத்தினால்தான் அடங்கல் சான்று கொடுக்கப்படும் எனவும் கட்டாயப்படுத்துகின்றனா். இதேபோல, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பிரீமிய தொகை வாங்க மறுப்பதாகவும் புகாா் நிலவுகிறது. இதன் காரணமாகவும் பல விவசாயிகள் பயிா் காப்பீடு செய்ய முடியாமல் தவிக்கின்றனா்.

    அடுத்தடுத்து தொடா் மழை இருக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது. எனவே, பயிா் காப்பீடு செய்ய விவசாயிகள் மிகுந்த ஆா்வத்துடன் உள்ளனா்.

    நெருக்கடியில் விவசாயிகள்: சம்பா - தாளடி பருவத்தில் பயிா் காப்பீடு செய்வதற்கு நவம்பா் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்குவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், நிகழாண்டு நவம்பா் 15 ஆம் தேதி வரை என கால அவகாசத்தைக் குறைத்திருப்பதால், விவசாயிகள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனா்.

    எனவே, பயிா் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பா் 15 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற நிலைமை உள்ளதால், மூன்று நாள்கள் கால அவகாசத்தில் பிரீமிய தொகையைச் செலுத்த வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனா்.

    விவசாயிகள் தவறாது பயிா் காப்பீடு செய்யுமாறு அரசு அறிவுறுத்தி வந்தாலும், பிரீமிய தொகையை செலுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. எனவே, எளிய முறையில் விரைவாகப் பயிா் காப்பீடு செய்வதற்கான ஏற்பாட்டை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp