தஞ்சாவூர்: அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக 50-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. திறக்கப்படும் தண்ணீர் முக்கொம்பு வழியாக கல்லணையை அடைந்து அங்கிருந்து கொள்ளிடம், காவிரி ஆறுகளில் திறந்து விடப்படுகிறது.
இதனால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொள்ளிடத்தில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் அய்யம்பேட்டை அருகே பட்டுக்குடி மற்றும் கூடலூர் கிராமத்தில் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும் தற்போது நடவு செய்துள்ள குறுவை நெற்பயிரும், வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்களும் நீரில் மூழ்கின.
நீர் சூழ்ந்த வீடுகளில் உள்ளவர்களை நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும். காங்கிரிட் வீடுகள் கட்டி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: கரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: மத்திய அரசு
மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் இங்கு அடிக்கடி பாதிப்பு ஏற்படுவதால் கொள்ளிடக்கரை பகுதிகளை காங்கிரட் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.