தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபல நாட்டிய ஆசிரியர் பா. ஹேரம்பநாதன் (77) உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் காலமானார்.
தஞ்சாவூர் மேல வீதியைச் சேர்ந்த இவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிய ஆசிரியராகப் பணியாற்றி ஏராளமான மாணவ, மாணவிகளுக்குப் பரதநாட்டியம் பயிற்றுவித்து, அரங்கேற்றம் செய்து வைத்துள்ளார்.
இவரது மாணவிகள் மலேசியா, சிங்கப்பூர், பிரான்சிலும் பரதக் கலையில் புகழ் பெற்றுள்ளனர். தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் நாட்டிய நாடகங்களை மேடையேற்றியவர்.
காங்கேயம் சிவன் மலை குறவஞ்சி நாடகத்தை உருவாக்கி மேடையேற்றியவர். தஞ்சாவூர் ஸ்ரீ சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகத்தை மீட்டுருவாக்கம் செய்து அரங்கேற்றியவர். நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி கோயிலில் நடைபெற்று வந்த கைசிக புராண நாட்டிய நாடகத்தின் மீட்டுருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர்.
தஞ்சாவூர் பெரியகோயிலில் தடைபட்டிருந்த சின்னமேளம் நாட்டிய விழாவையும் மீட்டுருவாக்கம் செய்து, தொடர்ந்து சித்திரைத் திருவிழாவில் நடத்தி வந்தார். இவர், கலைமாமணி விருதும், சங்கீத நாடக அகாதெமியின் புரஸ்கார் விருதும் பெற்றவர்.
அவரின் இறுதிச் சடங்கு புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. இவருக்கு மனைவி பாஷினி, மகன்கள் சுவாமிநாதன், ஹரிஹரன் ஆகியோர் உள்ளனர்.
தொடர்புக்கு: 88706 92582.