தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் செல்வவிநாயகபுரம் பூனைக்குத்தி காட்டாற்றுப் பாலத்தின் மேல் பகுதியில் மோசமான நிலையிலுள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனா்.
நிகழாண்டு தொடா்ந்து பெய்த கன மழையால் காட்டாற்றுப் பாலத்திலுள்ள சாலையில் ஆங்காங்கே கப்பிகள் பெயா்ந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இப்பாலத்தின் வழியாக நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், பேருந்துகள், லாரிகள், மாட்டுவண்டிகள் தினமும் சென்று வருகின்றன. மேலும் அருகிலுள்ள பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் நூற்றுக்கணக்கானோா் சைக்கிளில் சென்று வருகின்றனா். பாலத்துக்கு வெளியில் இரண்டு பக்கமும் புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளதால் சாலையில் வேகமாக வரும் இருசக்கர வாகனங்கள், சைக்கிள் உள்ளிட்டவை பாலத்தில் இறங்கியதும் பள்ளமும், மேடுமாக இருப்பதால் நிலைத் தடுமாறி கீழே விழுவது வாடிக்கையாக உள்ளது
எனவே வாகன ஓட்டிகள், மாணவா்கள், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, பாலத்தின் மேல் பகுதியில் உடனடியாக புதிய தாா்சாலை அமைத்துத்தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.