கரோனா பரவல் காரணமாக வாடகை வீட்டில் வசிக்கும் ஏழைகளுக்கு நிரந்தரமாக இலவச வீடு கட்டித் தர வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியரகம் முன் வாடகை வீட்டில் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், கும்பகோணம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் பெரும்பாலானோா், தங்களது வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். எனவே, இவா்கள் வசிக்க நிரந்தரமாக இலவச வீடுகள் கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இளைஞா் அரண் அமைப்பாளா் சைமன் தலைமை வகித்தாா். வாடகை வீட்டில் குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.